யாழில் வன்முறை கும்பலால் வீடொன்றுக்கு தீ வைப்பு ; சொத்துக்கள் நாசம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு, வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

யாழ். தென்மராட்சி மீசாலை மேற்கில் உள்ள வீடொன்றினுள் இன்று சனிக்கிழமை (07) அதிகாலை 01 மணியளவில் வீட்டின் கதவுகளை உடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு கதவுகள் ஜன்னல்கள் என்பவற்றை உடைத்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள், தொலைகாட்சி பெட்டி, கதிரைகள் உள்ளிட்ட வீட்டு தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

வீட்டில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் இருந்த போதிலும் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. வீட்டு தளபாடங்கள் மற்றும் வீட்டுக்கு வைக்கப்பட்ட தீயினை அயலவர்கள் கண்ணுற்று , அதனை அணைக்க முற்பட்ட போதிலும், பெருமளவானவை தீக்கிரையாகி உள்ளன.

குறித்த சம்பவத்தில் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *