வைத்தியசாலையில் இறந்து பிறந்ததாக கூறப்பட்டு குழந்தையை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றவேளை அங்கு குழந்தை திடீரென கண்விழித்து அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இச்சம்பவம் இந்தியா – அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பெண்ணொருவருக்கு பிரசவவலி ஏற்படவே அவரது கணவர் அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இந்நிலையில் அங்கு மருத்துவர்கள், தாய் அல்லது குழந்தை யாராவது ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என தெரிவித்தநிலையில் குறித்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. பின் தாய் நலமாக இருப்பதாகவும், குழந்தை இறந்தே, பிறந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மறுநாள் காலை அந்த ஆண் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, இறப்பு சான்றிதழுடன் குடும்பத்தினரிடம் வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைத்தது.
அதனை தொடர்ந்து, இறுதி சடங்குக்காக குழந்தையை மயானத்துக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர் பிளாஸ்டிக் கவரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
அப்போது குழந்தை அழ தொடங்கியது. இதை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்
உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது. இதனிடையே குழந்தை இறந்துவிட்டதாக கூறிய தனியார் வைத்தியசாலை முன்பு திரண்ட பொதுமக்கள் வைத்தியசாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்