கொழும்பில் மீட்க்கப்பட்ட தலையில்லா பெண்ணின் சடலம் : கொலையாளி தலைமறைவு!

கொழும்பில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்
முல்லேரியாவில் 51 வயதான டி.ஜி.பிரதீபா என்ற பெண் கடந்த 27ஆம் திகதி காலை முதல் காணவில்லை என அவரது மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் முல்லேரிய பொலிஸ் நிலையத்தினால் பொலிஸ் குழுவொன்று அன்றைய தினம் சிசிரீவி தரவுகளை பரிசோதித்துள்ளனர். இதன்போது, ​​குறித்த பெண் அங்கொடையிலிருந்து கடுவெல பகுதிக்கு நீல நிற முச்சக்கரவண்டியில் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் கடுவெல நகரின் மையத்தில் அமைந்துள்ள கடை ஒன்றின் முன், வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் சாரதி இருக்கையில் இருந்த நபருடன் அவர் உணவு கடைக்கு செல்லும் காட்சி அங்குள்ள சிசிரீவி கமராவில் பதிவாகியுள்ளது.

அங்கு குறித்த பெண் உணவை பெற்றுக் கொண்டு சுமார் 10 நிமிடம் உணவு சாப்பிட்டு விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதன்போது KI 3030 என்ற சாம்பல் நிற காரில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த பெண்ணை அன்றிலிருந்து காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த கார் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது அது சியம்பலாப்பே பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் சுதீர வசந்த என்பவருடையது என தெரியவந்துள்ளது. குறித்த பெண் இவருடன் சுமார் 20 வருடங்களாக நெருங்கிய உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பணப் பிரச்சனை காரணமாக இருவருக்கும் சிறிது காலமாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சியாம்பலாப்பே பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றை பொலிஸார் சோதனையிட்ட போது, ​​ஒரு அறைக்குள் நீண்ட முடி, இரத்தக் கறைகள் மற்றும் வீட்டின் வெளியே பகுதியளவு எரிந்த நிலையில் இரத்தக் கறையுடன் கூடிய பெண்களின் ஆடை பாகங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று பிற்பகல் குறித்த வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் களனி கங்கைக்கு அருகில் தலை மற்றும் கைகால்கள் இல்லாத பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டடுள்ளது

இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் குறித்த சடலம் காணாமல் போயிருந்த 51 வயதுடைய டி.ஜி.பிரதீபா என்ற பெண்ணின் சடலம் என, உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதாக , பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவருடன் நெருங்கிய உறவில் ஈடுபட்ட நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது 55 வயதான சுதீர வசந்த என்ற சந்தேகநபருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரிய பொலிஸார் மற்றும் சபுகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *