குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு இது தொடர்பில் உத்தரவு விடுத்துள்ளார்.
தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்கவில்லை இதன் காரணத்தினால் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார்.
எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.