குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து தொடர்ச்சியான உயிர் அச்சுறுத்தல் மற்றும் மனஅழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பதவி மற்றும் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர்மலை வழக்கில் நீதிபதியாக வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
மேலும் அண்மையில் தனக்கான காவல்துறை பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் சட்டமா அதிபர், தனது அலுவலகத்தில் கடந்த 21.09.2023ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும் படி அழுத்தம் பிரயோகித்தார்.
இந்நிலையில் குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி தனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவிடப்பட்டுள்ளன.
இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.
இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று தெரிவித்தார். அவர், தன்னுடைய பதவி விலகலை அறிவித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.