மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உட்பட நான்கு பேரை வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (26.09.2023) கைதுசெய்துள்ளனர்.
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமே இத்திருட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரிடம் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இம்முறைப்பாட்டை அடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக தலைமையில் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள், இரு ஆண்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களால் திருடப்பட்டதாக கூறப்பட்டுள்ள 20 பவுண் நகை, அத்துடன் முச்சக்கர வண்டி ஒன்றும் மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்