மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதி, சந்திவெளி பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள், மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் கடந்த திங்கட்கிழமை (25.09.2023) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் சிக்கி வாழைச்சேனை சுங்கான்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய சண்முகதாஸ் அன்புதாஸ், மற்றும் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய வடிவேல் தர்மராஜ் என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவதினம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளியில், போக்குவரத்து பொலிஸார் இரவு 9 மணியளவில் வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இருவரை பொலிஸார் நிறத்துமாறு சைகைகாட்டிய போது நிறுத்தாது அங்கிருந்து வேகமாக தப்பி ஓடிய போது வீதியில் எதிரே சென்ற கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதுடன் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.