பிறந்த பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்த மோசடி செயல் கண்டி வைத்தியசாலையில் பணிபுரியும் சிற்றூழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் நன்னடத்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
நன்னடத்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் நாவுல பொலிஸாருடன் இணைந்து நேற்று முன்தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வைத்தியசாலையில் பணிபுரியும் ஒருவரின் வீட்டில் இரண்டு மாத கைக்குழந்தைகள் இரண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இரண்டு சிசுக்களும் காலி மற்றும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குழந்தைகளை மீட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கண்டி நன்னடத்தைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு திணைக்களம் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இரண்டு சிசுக்களையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்ததாகவும் இந்த குழந்தைகளின் தாய் ஒருவர் தெல்தெனிய பிரதேசத்திலும் மற்றையவர் நிகவெரட்டியிலும் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்