மட்டக்களப்பில், மதுபோதையில் தனது மனைவி மற்றும் பிள்ளையை தாக்கிய பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் தண்டப் பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(21) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் குறித்த அதிகாரி மதுபோதையில் மனைவி மற்றும் தனது மகன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, அந்த நபரின் தாக்குதலில் இருந்து தப்பிச் சென்ற மனைவியும் அவரது மகனும் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.
எனினும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கணவன் தானும் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதோடு அங்கு கலவரத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, அவர் உடனடியாக கைது செய்யப்பட்டதுடன், மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் செலுத்துமாறும் 25 ஆயிரம் ரூபா கொண்ட ஒருவருட நன்னடத்தை பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.