திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றிரவு (20.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தளாய் – வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தெபிலியனகே விமலரத்ன என தெரியவருகிறது.
வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தியவுல்பொத்த என்ற இடத்தில் பொலிஸ் SI ஒருவரும் யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை- பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.