தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தனுஷ்க குணதிலக T20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா சென்றார். இதன்போது அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனுஷ்க குணதிலக தன்னை வன்புணர்வு செய்ததாக பொலிஸாரிடம் முறைபாடு செய்துள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகள் அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற விசாரணையின் போதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் அவருடன் தகாத உறவில் ஈடுபட்டவேளையில் தனுஷ்க குணதிலக தனது ஆணுறையை பெண்ணின் விருப்பம் இல்லாமல் அகற்றினார் என்பதே வழக்கின் முக்கிய குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.
எனினும் குறிப்பிட்ட பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக தகாத உறவில் ஈடுபடவில்லை என தனுஷ்க குணதிலக அதனை நிராகரித்துள்ளார்.
இதனிடையே இருவரும் ஒபேரா மதுபானசாலையில் முதலில் சந்தித்துள்ளதாகவும் இருவரும் அங்கு மது அருந்தி மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நான் சந்தித்தவேளை தனுஷ்க குணதிலக மிகவும் அழகானவராக காணப்பட்டார். ஆனால் நாங்கள் தகாத உறவுகொள்ள ஆரம்பித்தவேளை தீடிரென அவர் ஏதோ வினோதமாக மாற்றமடைந்தவராகவும் மிகவும் வன்முறை குணம் கொண்டவராக காணப்பட்டார் என அந்த பெண் தனது நண்பிக்கு குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோன்ற குறுஞ்செய்தியை தனது மற்றுமொரு நண்பருக்கும் அந்த பெண் அனுப்பியுள்ளார் என்ற தகவல் நீதிமன்றத்தில் வெளியாகியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கருத்து தெரிவிக்கையில், தனுஷ்க குணதிலக எனது கழுத்தை நெரித்தவேளை நான் எனது உயிருக்கு ஆபத்து என அஞ்சினேன். அவரின் செயற்பாடு சில சந்தர்ப்பங்களில் என்னால் மூச்சுவிடக் கூட முடியவில்லை, படுக்கை அறைக்கு சென்றவுடன் அவர் ஒரு வித்தியாசமான மனித மிருகமாக மாறினார்.
அத்துடன் அவருடன் இருந்த போது மூன்று தடவைகள் தமக்கு மூச்சு திணறல் மற்றும் மரண பீதி ஏற்பட்டது. நான் வேதனைப்பட்டதை பார்த்து தனுஷ்க குணதிலக சிரித்துக் கொண்டிருந்ததை நான் அவதானித்தேன் என ஒடின்டா நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.