பிரபல இந்திய யூ டியூபர் டிடிஎஃப் வாசன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கள் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு மோட்டார் சைக்களில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இதன்படி ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. இதன்போது டிடிஎஃப் வாசன் மோட்டார் சைக்கள் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.
இந்நிலையில், இவ்விபத்தில் படுகாயமடைந்த டிடிஎஃப் வாசன் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே, அவருடைய மோட்டார் சைக்கள் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, அவரது சாரதி அனுமதி பத்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்தோடு சிகிச்சைகளின் பின்னர் வீடுதிரும்பிய வாசனை இன்று பாலுசெட்டி சத்திரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியமை, கவனக்குறைவாகச் செயற்பட்டமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.