கல்முனை – சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 23 ஆவது வருட நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவு தினமானது சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் நேற்று(16.09.2023) மாலை நடைபெற்றதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியா வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அப்துல் காதர், அஷ்ரப்பின் அரசியல் முன்னெடுப்புகள், இலங்கை அரசியலில் அஷ்ரப்பின் வகிபாகம், இலங்கை தேசிய அரசியலில் அஷ்ரப்பின் சாதனைகள், முஸ்லிம் அரசியலில் அஷ்ரப் சாதித்தவை, சர்வதேச தொடர்புகளைப் பேண அஷ்ரப் கையாண்ட முறைகள் தொடர்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
அத்துடன் மு.கா. தவிசாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.மஜிட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் பின் ஆத்ம ஈடேற்றத்துக்காக விசேட கத்தமுல் குர்ஆன், மற்றும் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், எம்.எஸ் தெளபீக், முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம் மன்சூர், செய்யது அலி சாஹீர் மெளலானா, ஹுனைஸ் பாருக் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
மேலும் முன்னாள் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிப் பிரமுகர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான கட்சி ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர்.