தென்கொரியாவில் நிபுணத்துவப் பயிற்சிக்காகச் சென்ற இலங்கையின் தேசிய மட்ட வில்வித்தை வீரர்கள் இருவர் அண்மையில் காணாமல்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வில்வித்தை சங்கம், விளையாட்டு அமைச்சின் ஒப்புதலுடன் ஐந்து வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் குழுவை தென்கொரியாவுக்கு பயிற்சி அமர்வுக்காக அனுப்பியிருந்தது.
எனினும், தென்கொரியா விமான நிலையத்திற்கு வந்தவுடன் இதில் இரண்டு வீரர்கள் அணி நிர்வாகத்திற்கோ அல்லது மற்ற வீரர்களுக்கோ தெரிவிக்காமல் தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த பயிற்சி நெறி ஆகஸ்ட் 21 முதல் 25 வரை தென் கொரியாவின் வூஜு கொரஞ்சு வில்வித்தை மையத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க தகுதி பெற்ற ஐந்து வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இராணுவம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த இரண்டு வில்வித்தை வீரர்களே இவ்வாறு தென்கொரியாவில் காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து கொரியா வில்வித்தை பயிற்சியில் மூன்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளருடன் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற, இலங்கை அணியின் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் உட்பட 11 பேர் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும் இலங்கை தேசிய ஒலிம்பிக்குழு, இதுவரையில் அவர்கள் பற்றிய எந்தத் தகவலையும் கண்டறியவில்லை என கூறப்படுகின்றது.