கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று முதல் காணமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை வரை அவர் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காததால் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இன்று (15.09.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் புதுஐயங்குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சத்துரங்க என பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் எனவும் சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.