திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டமையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிழவியுள்ளது.
நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அருகில் உள்ள இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை எனும் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை நடப்பட்டதையடுத்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த பதாகை இன்று (09.09.2023) காலை பௌத்த பிக்குகள் சிலரால் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறதுடன், பதாகை நடப்பட்டதன் பின் அப்பகுதியில் பொலிஸார் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விகாரைக்கான பணிகளை இடைநிறுத்தக்கோரி ஆளுநரினால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இலுப்பைக்குளம் பகுதியில் குறித்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.