திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற இரவு தபால் சேவை ரயில் முன் பாய்ந்து தந்தையும், மகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (06) இரவு கந்தளாய் – பராக்கிர மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – கந்தளாய் புகையிரத நிலைய தண்டவாளத்தின் அருகே தந்தையும், மகளும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததாகவும், ரயில் வந்ததும் தந்தையும், மகளும் ரயிலின் முன்னே பாய்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 38 வயதுடைய தந்தையும் ஆறு வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரின் சடலமும் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.