நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினுடைய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி உள்ள நிலையில் ஆலய சுற்று வீதிக்குள் வாகனங்கள் உட்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு சிவப்பு வெள்ளை வேலிகளுக்குள் எவ்வித வாகனங்களும் அனுமதிக்காதவாறு பாதுகாப்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று (05.09.2023) மதியம் பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் எனக் கூறிக் கொண்டு தென்னிலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் சிவப்பு வெள்ளை கொடிகள் கட்டப்பட்ட தடுப்பு வேலிகளையும் தாண்டி ஆலய முன்றலில் பக்தர்கள் பிரதட்டை செய்யும் மணல்மேல் தனது காரை நிறுத்தியுள்ளார்.
மேலும் குறித்த நபர் சிவப்பு வெள்ளைக் கொடி கட்டப்பட்ட ஆலய வளாகத்தில் பாதணியுடன் நடமாடியதாகவும் நேரில் கண்ட பக்தர்கள் கூறியுள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குறித்த வாகனத்தை ஆலய வளாகத்தில் நிறுத்த அனுமதித்த பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஆலயச்சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் சென்று குறித்த நபரை அழைத்து வந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து பொலிஸ் உயர் அதிகாரியின் சகோதரர் என கூறப்படும் தென்னிலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் உடனடியாக தமது வாகனத்தை அப்புறப்படுத்தியுள்ளார்.