மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கீழ் இயங்கி வரும் 23 பிரதேச வைத்தியசாலைகளில் பணியாற்றுகின்ற சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கான வழங்கப்படும் உணவு முதலாம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சேவை சங்கத்தின் மத்திய சபை உறுப்பினர் மாணிக்கராசா லோகராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று (04.09.203) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் உணவு வழங்கும் நிறுவனங்கள் ஊடாக 3 நேர சமைத்த இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இவ்வாண்டு குறித்த சேவை வழங்குவதற்காக ஓதுக்கப்பட்ட நிதியானது தற்போது முடிவடைந்துள்ளதால் அதற்கான நிதி இல்லாமையினாலும் நிதி ஓதுக்கப்படாத காரணத்தால் ஒப்பந்தம் செய்து கொண்ட உணவு வழங்கும் சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தி ஒப்பந்தகாரர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடித மூலம் அறிவித்ததையடுத்து இலவச உணவு வழங்கள் கடந்த முதலாம் திகதியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாகாண பணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் உள்ள மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட வாழைச்சேனை, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைகள் , மாவட்ட, 52 கிராமிய வைத்திய சாலைகளான இலவச உணவு இடை நிறுத்தப்பட்டுள்ளதால் தூர இடங்களில் இருந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அந்தந்த வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பணியாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
எனவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இலவசமாக உணவு வழங்களை மீண்டும் உடனடியாக வழங்க அரசு முன்வரவேண்டும் என அராங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக மட்டு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் கருத்து தெரிவிக்கையில் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட சுற்று நிருபத்திற்கு அமைய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அதிகாரம் இல்லை எனவும் 22 வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச உணவு வழங்கல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.