ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி குறித்த பிரதேச முழுவதும் பரவியுள்ளது.
இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அண்மையில் தீப்பிடித்த கட்டுவான தொழிற்சாலை பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட இரசாயன திரவம் நீரில் கலந்துள்ளதனால் இவ்வாறு உருவாகியுள்ளதாக விவசாயிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த மர்மபொருள் முதலில் பஞ்சு உருண்டையாகத் தெரிந்தாலும், காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு பிரதேச சுற்றுப்புறச் சூழல் முழுவதும் பரவி நுரை போன்று காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இது வழமைக்கு மாறான நிகழ்வு எனவும்,குறித்த நுரை உடலில் பட்டால் அரிப்பு ஏற்படுவதாகவும், இதனை பார்க்க வந்த ஒருவர் வீட்டிற்கு சென்று வாந்தி எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதுதவிர, இவை அப்பகுதியின் குடிநீரில் கலந்தால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளை சந்திக்க நேரிடும் என அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்