கொழும்பு, களுத்துறை பிரதேசங்களில் பேருந்து மற்றும் ரயில் பயணிகளின் பயணப்பொதிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடும் நபர் ஒருவர் 37 கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக ரயில் மற்றும் பேருந்து பொதி வைக்கும் இடங்களில் பைகள் மற்றும் மடிக்கணினி பைகளை வைத்துவிட்டு, தூங்கும் பயணிகளை குறி வைத்து, சந்தேக நபர் திருட்டுகளை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் திருடப்பட்ட 32 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 5 மடிக்கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், கைது செய்யப்படும் போது அவரிடம் பல சிறிய ஹெரோயின் பொதிகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.