போலியான தகவல்களை சமர்ப்பித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரித்திட்டத்தின் கீழ், 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் 4,395 பில்லியன் ரூபாய் வைப்பில் இடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தற்போது தகுதி பெற்றுள்ள 15 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக சுமார் 15 பில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாகவும் தகுதிபெற்ற அனைவருக்கும் விரைவாக கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊனமுற்றோர், முதியோர், சிறுநீரக நோயாளர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் போலியான ஆவணங்கள் மற்றும் தகவல்களை சமர்ப்பித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு அஸ்வெசும நலன்புரி சட்டத்திலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஸ்வெசும பயனாளிகளில் முதல் குழுவினருக்கு அரசாங்கம் என்ற வகையில், கொடுப்பனவுகளை வழங்க முடிந்ததுள்ளதாகவும், அதில் 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சுமார் 4.395 பில்லியன் ரூபாய் வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு மிக விரைவில் வழங்கப்படவுள்ளதோடு, எதிர்காலத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.