வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விபரீதமாக முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (24) பதிவாகியுள்ளது.
அருளானந்தம் லக்ஸன் என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் அரபு நாடு ஒன்றுக்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் பணம் கேட்டு சண்டையிட்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து தண்ணீர் இறைக்கும் மோட்டாரினை கிணற்றினுள் தூக்கி வீசியுள்ளார். இதனையடுத்து அவர் நேற்று மதியம் வீட்டிற்கு அருகேயுள்ள காணி ஒன்றில் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். மேலும் அவர் போதைக்கு அடிமையானவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞரின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.