நாட்டில் நிலவும் கடும் வெப்பமான நிலை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள நிபுணர் ஜனக குமார தெரிவித்துள்ளார். இவ்வாறு உடலால் உணரப்படும் இந்த அதிக வெப்பநிலையை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அதிகூடிய வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் பதிவாகிய நிலையில், அதன் அளவு 37.8 பாகை செல்சியஸாகும்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் மழையில்லாத காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடைப்பருவ மழை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்யலாம் என எதிர்பாக்கபடுவதுடன் அதுவரை நாடு முழுவதும் வறட்சியான காலநிலை நீடிக்கலாம் என திணைக்களம் கூறியுள்ளது.
குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அதிக வெப்பநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்ப நிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.