இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு 6 மாத காலத்திற்குள் உரிய நீதி வழங்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட கட்டுலந்த, காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறியும் பொறிமுறையை துரிதமாக முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அதற்கான நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், காணாமல் போனவர்கள் தொடர்பான முதல் கட்ட விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவு செய்து கொள்ளும் என கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14,988 பேராகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி முதல் கட்ட விசாரணைகள் நிறைவடைந்தவுடன், காணாமல் போனவர்களின் சான்றிதழ்கள், அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறத் தயாராக இருக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் கட்டுலந்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொடுப்பனவுகளைப் பெற விரும்பும் உறவினர்கள், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் மூலம் உரிய கொடுப்பனவுகளைப் பெறுவார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.