தமிழ்நாடு- ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கஞ்சா தொகை ஆந்திராவில் கொள்வனவு செய்யப்பட்டு ராமநாத புரத்துக்கு எடுத்து வரப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஒரு குழுவினர், கஞ்சா கடத்தி செல்வதாகக் கிடைத்த தகவலின் பேரில் ஆந்திர பொலிஸார், குறித்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே வந்தபோது, ஆந்திர மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் அந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். இதன்போது வாகனத்தில் இருந்த 400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆந்திர பொலிஸார், தமிழகத்தின் ஆர்.எஸ்.மங்கலம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் தம்முடன் அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன் பறிமுதல் செய்த 400 கிலோ கஞ்சாவையும் அதே சரக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.