இலங்கையில் புதிய வரி ஒன்றை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக உயர்தர வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போதைப்பொருள் கடத்தல், திருட்டு, கப்பம் பெறுதல், பாதாள உலகம் போன்ற சட்டவிரோத செயல்களினால் ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாய்களை பதுக்கும் கடத்தல்காரர்களின் பணம் மற்றும் பிற சொத்துக்களுக்கு வரி அறவிடுவதற்காக இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்களுக்கு வரி வசூலிப்பது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போது, அவர்களுடைய முறையற்ற சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படவுள்ளது. மேலும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களுக்கு அமைய வரி அறவீடு செய்ய உத்தேசிக்க பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தற்போது, சட்டவிரோத சொத்துக்களை குவித்துள்ள 8000 பேர் தொடர்பாக சேகரித்துள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவகளின் சொத்துகளை சரிபார்த்து அவர்களிடமிருந்து முதலில் வரி வசூலிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
இந்த புதிய வரித் திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்ப முடிவுகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.