திருகோணமலைக்கு வடகிழக்கே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை – மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் குறித்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையை கடக்க வாய்ப்புள்ளது.
இதனால், இன்று (24) மற்றும் அடுத்த சில தினங்களில் (25 மற்றும் 26) நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் சில இடங்களில் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது காற்று வீசுக்கூடும்.
காற்றின் வேகமானது மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.