சுமந்திரனின் கபடகாய் நகர்ப்பு – ரணிலின் பேச்சு வார்த்தை அழைப்பால் தமிழ் கட்சிகளுக்குள் மூண்டது பனிப்போர்

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் ஏனைய கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளாதவாறு எம்.ஏ.சுமந்திரன் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிற்கும் சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பிற்கு அரச தரப்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தலைவர்களிற்கு முன்கூட்டியே தகவல் வழங்காமல், திடீர் அழைப்பு விடுக்கப்பட்டு, முறையற்ற ஏற்பாட்டுடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலுக்கு ஏனைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டு, அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

தம்மால் வர முடியாதென தெரிந்தும் சுமந்திரன் திடீர் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் சார்பிலும் தான் அதிபருக்கும், அதிபர் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எரிக் சொல்ஹெய்மை இந்த பேச்சில் இணைக்கும் நோக்கத்துடன் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டால், இந்திய தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை தாம் அழைத்து வருவோம் என க.வி.விக்னேஸ்வரன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், ஏனைய தமிழ் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி பேச்சை நடத்த ரணில் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *