கொழும்பில் மேலும் ஒரு வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு- குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!
கொழும்பு புறநகர் பகுதியான ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் இலக்கம் 09 ஹன்வெல்ல கடவையில் விடுதி ஒன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு 10.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளியில் வந்த இருவரில் ஒருவர் விடுதியின் கதவைத் தட்டி முதலில் சிகரெட் கேட்டுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற நபர் திடீரென கதவை திறந்து உரிமையாளரின் மார்பில் நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொஹமட் பருஷான் என்ற நபரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. போலீசாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது