இந்த மாதம் நடைபெற உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிவித்தல்
ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதன் போது கல்வித் துறையில் பெரும்பாலானவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இரண்டாம் பகுதியை முதலாவதாகவும் , முதற்பகுதியை இறுதியாகவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதி சற்று கடினமானது என்பதால் மாணவர்கள் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்கும் போது மனதளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பரீட்சை மண்டபத்திற்குள் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி அட்டை இம்முறை வழங்கப்பட மாட்டாது.
மாணவர்கள் விடையளிக்கக் கூடிய நேரத்தை மீதப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரு வருடங்களின் போது, விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்ட போதிலும் , இம்முறை பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகளின் வருகை பதிவு ஆவணத்தின் மூலம் பரீட்சைக்கு சமூகமளித்தமை உறுதிப்படுத்தப்படும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது