மக்கள் ஆணையை பெறாத ரணிலின் சர்வாதிகார போக்கு!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று எல்லா அதிகாரமும் இருந்தாலும் தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் எதேச்சாதிகாரமாக செயற்பட்டு வருகின்றார்.

அவரை உத்தியோகப்பூர்வ அதிபராக நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான விஷ்வநாதன் புஷ்பா தலைமையில் கொட்டகலையில் இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ,

“நாட்டில் இன்று வரிசை யுகம் முடிந்துவிட்டது எனவும், இயல்பு நிலை திரும்பிவிட்டது எனவும் சிலர் கூறுகின்றனர். உண்மை அதுவல்ல, பொருட்களின் விலைகள் எகிறிவிட்டன.

மக்களின் கொள்வனவு சக்தி குறைந்துவிட்டது. அதேபோல எரிபொருள் உள்ளிட்டவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் வழங்கப்பட்டு வருகின்றன. அதிபர் ரணில் விக்ரமசிங்க சட்டக்கல்லூரிக்கு சென்றிருந்த வேளை, அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்பட்டுள்ளது.

இந்நாட்டு மக்கள் அவரை உத்தியோகப்பூர்வ அதிபராக ஏற்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அவர் தெரிவாகி இருந்தாலும், மக்கள் ஆணை இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

என்னதான் அதிகாரம் இருந்தாலும் தர்மத்தின் பக்கம் நிற்பதே சரியான தீர்மானம். ஆனால் அதிபரால் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டு மக்களை ஒடுக்க முற்படுகின்றார்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *