முதலாவதாக இறுதிப் போட்டிகள் நுழைந்தது ஆர்ஜன்ரீனா!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜன்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதியதால் களத்தில் சூடுபறந்தது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் ஆர்ஜன்ரீனா அணிதலைவர் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில் தங்கள் அணிக்கான இரண்டாவது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றார்.

இதன்மூலம் போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்ரீனா அணி முன்னிலை வகித்தது.

தொடர்ந்து அனல் பறந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் 2-வது முறையாக ஜூலியன் அல்வாரஸ் தனது அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து நடந்த போட்டியில் கோல் அடிக்க குரேஷியா அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் குரேஷியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இதன்மூலம் குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜன்ரீனா அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *