மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இலங்கை மத்திய வங்கியினால் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
நாளாந்தம் நாட்டில் நிலவும் பண மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளுக்கு அமைய இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
மோசடியான தொலைபேசி அழைப்புக்கள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் பொதுமக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக வலைத்தள செய்திகள் போன்றவற்றின் ஊடாக வெளிநாட்டுத் தொழிலுக்கு அனுப்புவதாக வாக்குறுதியளித்து அல்லது பல்வேறு பெறுமதிவாய்ந்த பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுங்கத் தீர்வைகளைச் செலுத்துமாறு கோரி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றனர்.
இது போன்ற மோசடிகள் மூலம் தனிப்பட்டவர்களிடமிருந்து பண மோசடி செய்வது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அண்மைக்காலமாக துரித அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டு வருகின்றது.
ஆகையினால், முறையான சரிபார்த்தலின்றி மேற்குறித்த தகவல்களின் அடிப்படையில் இனந்தெரியாத தரப்பினர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட வேண்டாம் என்றும் அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்ப வேண்டாம் என்றும் நிதியியல் உளவறிதல் பிரிவு பொதுமக்களை வலியுறுத்துகின்றது.
மாறாக இதுபோன்ற குறுஞ்செய்திகள் , மின்னஞ்சல் செய்திகள் கிடைக்கப் பெற்றால், நிதியியல் உளவறிதல் பிரிவின் 011-2477125 , 011-2477509 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.